Thursday 1 May 2014

வலங்கை - இடங்கை


‘அந்தக் கையால இல்ல, வலது கையால கொடு   
 
இதை நீங்கள் சில சமயம் கேட்டிருக்கலாம், அல்லது உங்களுக்கே சொல்லப்பட்டிருக்கலாம்.வலது கை ஏன் உசத்தி, இடது கை ஏன் உசத்தி இல்லை ? இதன் பின்னால் ஆயிரம் ஆண்டு வரலாறு உள்ளது. கி.பி. 1000 – ல் பிராமணர்களால் ஏற்படுத்தப்பட்ட வலங்கை இடங்கை குழுக்களும், அதனால் ஏற்பட்ட சண்டைகளுமே இதன் மூலாதாரம்.

தமிழர் சிற்ப , கட்டிட, நெசவு , தச்சு, ஆபரண, வேளாண்மை, நாவாய் கட்டுதல், இசை நடன கலைகளில் மிகச்சிறந்து விளங்கினர். தஞ்சை பெரிய கோவிலும், கல்லணையும், மதுரை மீனாட்சி கோவிலும், மாமல்லபுரமும், பட்டாடைகளும் சிறந்த சாட்சிகள்.

வேளாளரும், கம்மாளரும், அந்தணரும் மற்ற குலங்களும் ஒன்றிலிருந்து மற்றது உசத்தி எனவோ, வரிசைக்கிரமமாக பிரிக்கப்பட்டிருந்ததாவோ தகவல் இல்லை. பிராமணர்கள் இருந்த போதிலும், எல்லோருக்கும் மேல் என எந்த தடயமும் இல்லை.

பொதுவாக விவசாயம் செய்பவர்களே சமூகத்தில் முதலிடம் பெற்றிருந்தனர். சோழ காலத்தில் கட்டிட கலைக்கு மிக முக்கியம் தரப்பட்டு, எங்கும் கோவில்களும், விகாரங்களும் கட்டப்பட்டன. இதனால் தச்சு வேலை செய்பவர்கள் ராஜமரியாதை பெற்றனர். இது சமூகத்தில் சிறுசிறு சலசலப்புகளை உருவாக்கி கொண்டிருந்தது.
அருள்மொழித்தேவன் என்ற இராஜராஜன் சாளுக்கிய, கலிங்க, வங்க நாட்டை வென்று ஏராளமான பிராமணர்களை பிடித்து வந்தான். அதில் ஒருவர், விஷ்ணு சர்மா. தன்னுடைய பேச்சாலும், சின்ன சின்ன தந்திரங்களாலும் தன்னை ராஜ குருவாக நியமித்துக் கொண்டார். அவருடைய சூழ்ச்சியில் உருவானதே வலங்கை இடங்கை குழுக்கள். வேளாளர்கள் மற்றும் அவர் சார்பானவர்களை வலங்கையாகவும், ஏனையோரை இடங்கையாகவும் தமிழ்க் குலங்களை இரண்டாக்கினார். அப்போதிருந்த 198 குலங்களில், 98 குலங்களை வலங்கையாகவும், 98 குலங்களை இடங்கையாகவும் ஆகின. ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனி சடங்குகள், உரிமைகள், இலச்சினைகள், கொடுக்கப்பட்டன.
வலங்கைக்கு அதிக சலுகைகள் வழங்கி மற்றவர்களை கொதிப்படையச்செய்து சண்டை, சச்சரவை மேலும் பெரிதாக்கியும், மற்றும் இடங்கைக்கு வேறு சலுகைகள் வழங்கி வலங்கைக்கு எதிராக சண்டையிடச் செய்தும், தன்னை சமூக நீதிமானாக நடுநிலைவாதியாகவும் காட்டிக் கொண்டு சமூகத்தை தன் வயப்படுத்திக் கொண்டார்.

இதுவே தமிழ் குலத்தின் சாதிய வரலாறு. 

செருப்பு அணிவது, வாசலின் அளவு, சீலை தோளில் போடுவது, குடை பிடிப்பது போன்ற உரிமைகளை ராஜகுருவையும், அவருடன் இருந்தவர்களும் தீர்மானித்தனர். ஒரே சாதியைச்சார்ந்த ஆணும் பெண்ணுமே வேறுவேறாக்கப்பட்டனர். அண்ணனும் தம்பியும், மாமனும் மச்சானும் வேறுவேறாக்கப்பட்டனர். தமிழ் குலத்தை சின்னாபின்னமாக்க வழிவகுக்கப்பட்டது. 

ராஜகுருவையும், அவரை மதித்தவர்களும், வேண்டப்பட்டவர்களும் ஒரே தொழிலில் இருந்த குலங்களை கூட ( உதாரணமாக, செட்டியார் ) இரண்டாகப் பிரித்தனர். வெள்ளாளச்செட்டி வலங்கையாகவும், பேரிசெட்டி இடங்கையாகவும் ஆக்கப்பட்டன. இருவருக்கும் வேறுவேறு தெருக்கள், குலப்பட்டம், செருப்பு, விருதுகள் கொடுக்கப்பட்டன.

தொழில்
வலங்கை
இடங்கை
வாணிகம்
வெள்ளாளச்செட்டி,கோமுட்டி
பேரிசெட்டி
நெசவு
சாலியன்    
தேவாங்கர், கைகோளர்
வேளாண்மை
பள்ளி ( பெண்கள் )
பள்ளி ( ஆண்கள் மட்டும் ), பள்ளர்

இவ்வாறு பிரிக்கப்பட்ட என் தமிழினம், இன்றும் தனக்குள்ளேயே ‘ நீ என் முன்னால் செருப்பணிய கூடாது’, ‘நீ என் தெருவில் வரக்கூடாது’, சொல்லிக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது.